

சென்னை: கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியில், கடந்த 28-ம் தேதி சாக்குப் பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கீழ்ப்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
முதல்கட்டமாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் பராமரிப்புப் பணியாளராக வேலை செய்து வந்த பிரியங்கா (22) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச்சேர்ந்த பிரியங்கா, தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞருடன் கடந்த 6 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால் கடந்த ஆண்டு அக்டோபரில் கர்ப்பமடைந்த பிரியங்கா, அதை குடும்பத்தினரிடமோ, வேறு யாரிடமோ தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்துள்ளார். இந்த மாதம் 12-ம் தேதி கீழ்ப்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் பராமரிப்புப் பணிக்கு சேர்ந்திருந்த பிரியங்காவுக்கு, கடந்த 27-ம் தேதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர் வேலை பார்த்து வந்த வீட்டின் கழிப்பறையிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தை அழுதால் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் குழந்தையின் வாய், மூக்கை கையால் அழுத்தி உள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
பிறகு பிரியங்கா, தனது தோழிகள் மற்றும் பணியிடத்தில் பழக்கமான சிலரிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த பிளாஸ்டிக் அரிசி மூட்டை பையில் குழந்தையின் சடலத்தை வைத்து அதிகாலையில் குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
திருமணமாகாமல் குழந்தை பெற்றது வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்திலேயே இந்தச் செயலில் ஈடுபட்டதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துக்குப் பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுபவர்களிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.