

நாவலூர்: சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் காரில் இருந்த நிதி நிறுவன முன்னாள் பங்குதாரர் மர்ம நபர்களால் காருடன் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்க தாழம்பூர் போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்பட்டதாக கூறப்படும் நியோமேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, 3 மடங்கு லாபம் வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.4,000 கோடி வரை மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. பின்னர் நிறுவனம் செயலிழந்த நிலையில், அதன் நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர்களில் ஒருவரான சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (56), நேற்று முன்தினம் தனது காரில் நாவலூர் பகுதிக்கு சென்றிருந்தார். அவருடன், பெருங்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஷியாம் (30) இருந்தார்.
நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையோரத்தில் காரை நிறுத்திய சார்லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி வருமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஷியாம் அங்கிருந்து சென்று 15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தபோது, கார் மற்றும் அதில் இருந்த சார்லஸ் இருவரும் மாயமாகியிருந்தனர். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மற்றொரு காரில் வந்த நான்கு பேர், சார்லசுடன் சில நிமிடங்கள் பேசிய பின்னர், அவரை அவரது காருடன் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, இது திட்டமிட்ட கடத்தலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கார் திருச்சி சுங்கச்சாவடியை கடந்து சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சில முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார்லஸை பத்திரமாக மீட்கவும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும், தாழம்பூர் காவல் நிலைய போலீஸார் 4 தனிப்படை அமைத்து, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை புறநகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.