

படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் லோகேஷ் என்பவர் வீட்டில் தங்கியிருந்த பரத், சீனு ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து தப்பியவர்களை மணிமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் (24), சீனு (25). இருவரும் நண்பர்கள்.
கல்லூரி பயின்று வந்தனர். பகுதி நேரமாக துக்க நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாடி வந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு ஒரகடம் அருகே நடைபெற்ற துக்க நிகழ்வுக்கு கானா பாடல் பாட சென்றுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு படப்பை அடுத்த ஓரத்தூர் ஊராட்சி அம்மணம்பாக்கம் கிராமத்தில் நண்பன் லோகேஷ் (17) வீட்டுக்கு வந்து தங்கி உள்ளனர். அப்போது வீட்டில் லோகேஷின் தந்தை மோகன் (40) தாய் சங்கீதா(37) தங்கை ஹரிணி (14) ஆகியோர் இருந்துள்ளனர்.
இதனிடையே காலை 11:30 மணியளவில் 3 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம கும்பல், வீட்டில் நுழைந்து,பரத், சீனுவை வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற லோகேஷன் தந்தை மோகனையும் அவர்கள் வெட்டினர்.
இதனால் அச்சமடைந்த 4 பேரும் ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்தியுள்ளனர். தொடர்ந்து இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
பரத், சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடம் வந்த படப்பை போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரத், சீனுவை வெட்டி கொலை செய்ய என்ன காரணம்.? மர்ம கும்பலின் பின்னணி குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட இருவர் மீதும் எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்குக்கும், இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.