

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்த செல்வகுமார் (30), தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்குச் செல்ல புறப்பட்டார். காலை 7 மணி அளவில் கூடுவாஞ்சேரி சாலையில் அவர் மாடம்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் மாடம்பாக்கம் மூகாம்பிகை நகரை சேர்ந்த நவீன் (25) என்ற தனியார் நிறுவன ஊழியர், இரவு பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட் டுக்கு திரும்பி வந்தார். மாடம்பாக்கம் பகுதி அருகே வந்தபோது 2 பைக்குகளும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இருவரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.