

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2 நாட்களாக காஞ்சி மாவட்டத்தில் காவல் துறையினர் 169 ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் அதிரடி தணிக்கை மற்றும் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 169 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில், குற்றப் பின்னணி கொண்ட 59 பேர் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாங்கள் இனிமேல் எந்தவொரு சட்டவிரோத அல்லது குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என உறுதி பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், அவர்கள் ஓராண்டு கால நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரம்,தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.