

சென்னை: திருப்பதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு, வியாசர்பாடியில் ஒரு வீட்டில் கஞ்சாபதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தனிப்படை போலீஸார் வியாசர்பாடி, சாஸ்திரி நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராஜேஷ் (28) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ராஜேஷ் தனது கூட்டாளியான கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை சேர்ந்த சேதுராமன் (35) என்பவருடன் சேர்ந்து ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து சரக்கு லாரி மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் சேதுராமன் வீட்டில் சோதனை நடத்தி 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.