

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் கள்ள நோட்டு கும்பல் பதுங்கி இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் உதவியுடன் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபலமான தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.
அங்கு அறை எடுத்து தங்கியிருந்த சபிக் ரஹ்மான் (37) என்பவரது அறையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சபிக் ரஹ்மானை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரில் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ரூபாயை இரட்டிப் பாக்கி தரும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ராமாபுரத்தில் கருப்பு தாள்
இதற்கிடையே, ராமாபுரம் கோத்தாரி நகர் பசுபதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருப்பு தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வளசரவாக்கம் காவல் சரக உதவி ஆணையர் செம்பேடு பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் ராமாபுரம் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். ஒரு மருத்துவருக்கு சொந்தமான அந்த வீட்டில், தோட்டப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருணாச்சலத்திடம் (63) போலீஸார் விசாரணை நடத்தினர்.
வீட்டின் 2-வது மாடியில் இருந்த அலுமினிய சூட்கேஸில் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளின் அளவுக்கு வெட்டப்பட்ட சுமார் 40 கட்டுகள் கொண்ட கருப்பு தாள்கள் இருந்தன.
அவை கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் தாளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.