

சென்னை: புழல் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கை கைதிகள் ரகளையில் ஈடுபட்டதோடு பொருட்களையும் சூறையாடினர்.
சென்னை புழல் மத்திய சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் திருநங்கைகள் என 150 பேர் உள்ளனர்.
இவர்களில் எண்ணூரை சேர்ந்த திருநங்கை அபி, செம்மஞ்சேரியை சேர்ந்த சுஜி மற்றும் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா ஆகிய 3 திருநங்கைகளை நிர்வாக காரணங்களுக்காக புழல் சிறை அதிகாரிகள் வேலூர் மற்றும் திருச்சி சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்குள்ளேயே நேற்று முன்தினம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதோடு, ரகளையிலும் ஈடுபட்டனர்.
மேலும், சிறையில் உள்ள தொலைபேசி, ஸ்கேனர், டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி, பதிவேடுகளை கிழித்தெறிந்தனர். அதோடு மட்டுமல்லாமல் சிறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது ஆடைகளை அகற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புழல் சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 3 திருநங்கைகள் மீதும் அரசு சொத்துகளை சேதப்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.