

கோப்புப் படம்
சென்னை: கடந்த மாதம் 24-ம் தேதி மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு 20 லிட்டர் கேனில் சாராயத்தை மறைந்து வைத்திருந்ததாக மயிலாப்பூர், பிடாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வனிதா (36) என்பவரை கைது செய்தனர்.
ஆந்திராவிலிருந்து சட்ட விரோதமாக சாராயத்தை வாங்கி வந்து, தண்ணீர் கேன் போடுவதுபோல மறைத்து விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மாமூல் கொடுக்க மறுத்ததால் மயிலாப்பூர் காவல் துணை ஆணையரின் தனிப்படையை சேர்ந்த 3 போலீஸார் வனிதாவை சிக்க வைத்திருப்பது தெரியவந்தது. வனிதா மீது ஏற்கெனவே மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக வழக்குகள் உள்ளன.
தற்போது, அவர் திருந்தி வாழ்வதுடன், வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில்தான் அவரிடம் தனிப்படை போலீஸார் மாமூல் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், போலீஸார் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் வினோத் குமார் (ஜாம்பஜார் காவல் நிலையம்), முதல்நிலை காவலர் பிரகலநாதன் (ராயப்பேட்டை காவல் நிலையம்), முதல்நிலை காவலர் செல்வகுமார் (பட்டினப்பாக்கம்) ஆகிய 3 பேர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.