

சென்னை: கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வேதனை அடைந்த துணை நடிகை அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (39). தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர் திருமணமாகி முத்தியால்பேட்டையில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் ராஜேஸ்வரி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று மயங்கினார். அவரது பெற்றோர் உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜேஸ்வரி நேற்று காலை உயிரிழந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சைதாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.