சகாதேவன்.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளான எஸ்எஸ்ஐ தருமபுரியில் சடலமாக மீட்பு
தருமபுரி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தருமபுரி ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி மாந்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் (58). இவர் தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மணியக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, துறை ரீதியான நடவடிக்கை மூலம் அவர் காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்வதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்ற சகாதேவன் நேற்று காலை தருமபுரி ரயில் நிலையம் அருகே உள்ள தேக்குமரத் தோப்பில் ஒரு மரத்தில் புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸார் சகாதேவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தன் உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை என்றும், குணமாகாத வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டு சகாதேவன் கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது உயிரிழப்பில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்று போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
