

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று முன்தினம் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் வருகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புக்காக போலீஸார் வந்திருந்தனர்.
பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முத்துப்பாண்டி, மணி நகரில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு சில பெண் காவலர்களும் பணியில் இருந்தனர்.
சோதனைச்சாவடி அருகே உள்ள கழிப்பறைக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் சென்றார். அப்போது, அங்கு செல்போன் கேமரா மூலம் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
விசாரணையில், அந்த செல்போனை வைத்து வீடியோ எடுத்தது எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் முத்துப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர்.