

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள்.
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மலைச்செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, மண்டபம் முகாமுக்குள் வெளிநபர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகாமில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.