

பூந்தமல்லி: விபத்தில் காயமடைந்த தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு பைக்கில் பின்தொடர்ந்து சென்ற மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(39). இவர் பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருணின் தந்தை ஏழுமலை சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
ஆகவே அருண் தன் தந்தைக்கு தான் பணிபுரியும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன்தினம் அவரை ஆம்பு லன்ஸில் ஏற்றிவிட்டு, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோர ஆஞ்சநேயர் கோயில் சுற்றுச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.