

பைக் சாகசத்தில் ஈடுபட்டவாறு இரும்பு சாலை தடுப்பை இழுத்துச் சென்ற இளைஞர்கள்.
சென்னை: முக்கிய சாலைகளில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை இயக்கி வீலிங் உள்ளிட்ட ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கிறது.
இந்த சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள், போலீஸார் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த இரும்பு தடுப்புகளை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
அப்போது, தடுப்புகள் சாலையில் உரசியதால் தீப்பொறிகள் பறந்தன. மற்றொரு இளைஞர், பைக்கின் முன் பக்க வீலை மேலே தூக்கி ஆபத்தான முறையில் அதிவேகமாக செல்கிறார்.
இன்னொருவர் இங்கும், அங்குமாக வளைந்து, வளைந்து செல்கிறார். இப்படி, 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித் தனியாகவும், இருவராக சேர்ந்தும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், வைரலான வீடியோவை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து பைக்சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.