

சென்னை: அயனாவரத்தில் மதுபோதையில் தகராறு செய்த கார் ஓட்டுநரை, சர்ஜிகல் கத்தியால் குத்திய தனியார் மருத்துவமனை இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
திருமுல்லைவாயில் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (32). இவர் அயனாவரம் கே.ஹெச். சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ம் தேதி கார் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
அவர் அடிக்கடி மது அருந்திவிட்டுப் பணிக்கு வந்ததாலும், சரியாக வேலைக்கு வராததாலும், மருத்துவமனை இயக்குநர் நவீன் கடந்த 4-ம் தேதி அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி மாலை மருத்துவமனைக்கு மது போதையில் வந்த சத்யா, இயக்குநர் நவீனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சத்யாவிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தைக் காலையில் தருவதாகக் கூறியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்ற சத்யா, மீண்டும் மது அருந்தி விட்டு வந்து, மருத்துவமனை ஊழியர்களிடமும் இயக்குநரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இயக்குநர் நவீன், அங்கிருந்த சர்ஜிக்கல் கத்தியை எடுத்து சத்யாவின் தோள்பட்டையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சத்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அயனாவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில், நவீன் மற்றும் சத்யா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மருத்துவமனை இயக்குநர் நவீனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்குப் பின் கார் ஓட்டுநர் சத்யாவையும் கைது செய்ய உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.