

நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் அப்பகுதியில் கடை நடத்தி
வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.
சிறை அறையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சபரிவர்மனை போலீஸார் பலமாக தாக்கி உள்ளதாகவும், அவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் கிடையாது எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவ
மனை வளாகத்தில் திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.