

சூர்யா
சென்னை: பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற காவலர் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை போலீஸ் சீருடையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த 32 வயதுடைய பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
காவலரை அந்த பெண் வீட்டுக்குள்ளே வைத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டு கூச்சலிட்டார். அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். மேலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடம் விரைந்து கதவைத் திறந்து காவலர் சூர்யாவை கைது செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் காவலர் சூர்யா அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை காவல் ஆணையர் அருண் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
“சம்பந்தப்பட்ட பெண் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இது தொடர்பான சோதனைக்காகவே அப்பெண் வீட்டுக்குச் சென்றேன். வேறு எந்த நோக்கத்துடனும் அங்கு செல்லவில்லை” என காவலர் சூர்யா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், “அவர் அந்த பெண்ணிடம் ‘நீ கணவரை பிரிந்தும், நான் மனைவியைப் பிரிந்தும் வாழ்கிறோம். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்’ எனக் கூறிய படி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனாலேயே அவர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்” என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.