

கரூர்: கரூர் மாவட்டம், சங்கரமலைபட்டி சங்கரேஸ்வரர் கோயில் கோபுர கலசம் திருட்டுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே அமைந்துள்ளது சங்கரமலைப்பட்டி. இம்மலை மீது சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மலை பாறைகளில் பொன்னர், சங்கர் வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. இங்கு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோபுர கலசம் நேற்று திருடுப்போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று (டிச.16-ம் தேதி) மாயனூர் போலீஸில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரிடியம் இருக்குமென யாரும் திருடியுள்ளார்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இக்கோபுர கலசத்தால் சுமார் 5 கி.மீட்டர் சுற்று வட்டார அளவில் இடி, மின்னல் தாக்கியதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் 3 கோபுர கலசங்கள் திருடப்பட்டு கலசங்கள் உடைக்கப்பட்டு கோயில் வளாகத்திலேயே நேற்று வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து லாலாபோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரிடியும் இருக்கலாம் என திருடியவர்கள் அதுபோல, எதுவும் இல்லாததால் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.