

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரில் குடும்பத்துடன் வசிப்பவர் லேப் டெக்னீஷியன் புனிதாஸ்ரீ (22). சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்தார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட் ஜெகதீஸ் (52) மனைவி, மகளுடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.
போட்டோ ஷூட் எடுத்து அந்த போட்டோ மற்றும் வீடியோக்களை காண்பித்து சினிமா அல்லது டிவி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கேட்கலாம் என புனிதாஸ்ரீயிடம் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய புனிதாஸ்ரீ போட்டோ ஷூட் நடத்த ஒப்புக் கொண்டார். இதை யடுத்து, ஜெகதீஸ் அவரை சென்னைக்கு காரில் அழைத்துச் சென்றார். பின்னர் போட்டோ ஷூட்டுக்கு தேவையான புதிய ஆடைகளை வாங்க ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு கூட்டிச் சென்றார்.
அங்கு புனிதாஸ்ரீயை ஆடைகளை வாங்க வைத்து, அந்த ஆடைகளை அவர் அணிந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் ஏற்கெனவே கைப்பையில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகளை நைசாக திருடிக் கொண்டு ஜெகதீஸ் தப்பினார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு இதை கவனித்த புனிதாஸ்ரீ இது தொடர்பாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெகதீஸ் மற்றும் திருட்டுக்கு உதவியதாக இருந்த 10-ம் வகுப்பு படித்துவரும் 16 வயது சிறுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் ஜெகதீஸ் மற்றும் இளஞ்சிறுமி ஆகியோர் இதேபோல சென்னை சாஸ்திரி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் குடும்பத்துடன் நன்றாக பழகி நம்பிக்கை ஏற்படுத்தி, தங்க நகைகள் மற்றும் செல்போன்களை ஏமாற்றி திருடியுள்ளது தெரியவந்தது.