

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை பார்வையிட்ட மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர். (உள்படம்) பெட்ரோல் குண்டு வீசிய இடம்.
காரைக்குடி: காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பரமணியபுரம் முதல் வீதியில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் அலுவலகம் உள்ளது. நேற்று காலை அலுவலகத்தை ஊழியர்கள் திறக்க வந்தபோது, நுழைவாயிலில் 2 இடங்களில் பெட்ரோல் எரிந்த அடையாளமும், உடைந்த பாட்டில்களும் கிடந்தன. தகவலறிந்து மாங்குடி எம்எல்ஏ மற்றும் காங்கிரஸார் அங்கு வந்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் 2 பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மேலும், அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், போலீஸார் ஆய்வு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.