

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிறைக் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளி உயிரிழந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் 750-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களில் யாருக்காவது மனநல பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் இங்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சையளிக்க, சிறைக் கைதிகள் சிகிச்சைப் பிரிவு உள்ளது. அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பராமரிப்பாளர்கள், வார்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய விசாரணைக் கைதி ஒருவர், தீவிர மனச்சிதைவு, தற்கொலை தூண்டுதல் ஆகிய நோய்க்குள்ளானதால், அவர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில மாதங்களாக அந்த வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 20-ம் தேதி காலையில் அவர் மற்றொரு நோயாளியான ஜாஹிர் என்பவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று ஜாஹிர் உயிரிழந்தார். இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜாஹிரைத் தாக்கியவர், ஏற்கெனவே தனது தாயைக் கொன்ற தற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த ஜாஹிர் வாய் பேச முடியாதவர். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் யாசகம் எடுத்து வந்துள்ளார். கடந்த 2024-ல் மற்றொரு பிச்சைக்காரரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மற்றொரு நோயாளி தாக்கி உயிரிழந்துள்ளார்.
முழுமையான பாதுகாப்பு
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 விசாரணை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பது எங்களின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.