

ராமேசுவரத்தில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாசிஷ் கஞ்சா ஆயில்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.12 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் அருகே பாம்பன் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக இந்திய கடலோரக் காவல் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் படையினர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாம்பன் முந்தல் முனை கடற்கரையில் நாட்டுப் படகில் மர்ம நபர்கள் 4 பேர் கடத்தல் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். காவல் படையினரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.
படகைச் சோதனையிட்டதில் அதில் மறைத்து வைத்திருந்த 9.5 லிட்டர் ஹாசிஷ் எனப்படும் கஞ்சா ஆயில் இருந்தது. அதைப் பறிமுதல் செய்து, இந்திய கடலோரக் காவல் படையின் மண்டபம் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில் தப்பியோடிய 4 பேரும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த கஞ்சா ஆயில் மதிப்பு ரூ.12 கோடி என கடற்படையினர் தெரிவித்தனர். பின்னர், கஞ்சா ஆயில் சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல்காரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.