

கோப்புப் படம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (26). இவர் நெல்லியாளம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் பிரசாந்த்தை தொலைபேசியில் அழைத்தனர். அவர் அழைப்பை ஏற்காததால் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.
அப்போது, பிரசாந்த் ஒரு வாரமாக அலுவலகம் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பந்தலூர் பஜாரில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னலை திறந்து பார்த்தபோது அறையில் இருந்த கம்பியில் தூக்கிட்ட நிலையில் பிரசாந்த் சடலமாக காணப்பட்டார். இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், பிரசாந்த், காந்தல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்ததும், அவரையே திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்தும், அவர்கள் மறுத்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பந்தலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பிரசாந்த் இறந்த தகவல் ஊட்டியில் உள்ள அவரது காதலிக்கு தெரியவந்ததும் அவரும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஊட்டி போலீஸார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.