

வருசநாடு: மதுவுக்கு அடிமையான கணவரால் விரக்தியடைந்த பெண், தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தண்டியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள்(40). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி, குழந்தைகள் தேவா (7), நீதி (2).
ஜெயபெருமாள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். குடும்பச் செலவுக்கும் பணம் தராததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்ததால், குடும்பத்தில் பிரச்சினை அதிகரித்தது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான தனலட்சுமி நேற்று அதிகாலை தனது 2 குழந்தைகளுடன், ஒரு விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களது உடல்கள் கிணற்றில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், வருசநாடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.