

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்குமரன் என்பவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்தார்.
இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைதுக் செய்தனர். ஜாமீனில் வெளிவந்ததும் என்னைப் பழிவாங்கும் நோக்கில், எனக்கு எதிராக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை கைது செய்வதற்காக டிஎஸ்பி சுதிர் தவறான வாக்குமூலங்களை உருவாக்கியுள்ளார்.
இது தொடர்பாக நான் புகார் அளித்ததால் விசாரணையை வேறு ஒரு டிஎஸ்பிக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றினார். புதிய டிஎஸ்பி விசாரணை நடத்தி, என் மீதான புகார் உண்மைக்கு புறம்பானது என்று கூறி, வழக்கை முடித்துவைத்தார்.
என் மீது தவறாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாக கையாண்ட டிஎஸ்பி சுதீர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஐ.ஜி. விசாரிக்க வேண்டும்: மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, "மனுதாரரின் புகார் குறித்து தென் மண்டல ஐ.ஜி. விசாரணை நடத்தி, டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.