

சென்னை: மெரினாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிய வழக்கில் லாரி ஓட்டுநர், கிளீனர் என வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெரினா கலங்கரை விளக்கத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மெட்ரோ பணிக்கு தேவையான சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை அதன் பொறுப்பாளர்கள் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரிடம் ஒப்படைத்தனர்.
பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் லாரியில் கொண்டு சென்ற பொருட்கள் பனகல் பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படவில்லை.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட லாரியை தேடியபோது கோடம்பாக்கம், மீனாட்சி கல்லூரி அருகே லாரி மட்டும் தனியாக நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள மெட்ரோ கட்டுமானப் பொருட்கள் இல்லை. யாரோ திருடிவிட்டு, லாரியை மட்டும் அங்கு விட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மெட்ரோ அதிகாரிகள் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிச் சென்றது அந்த லாரி ஓட்டுநர் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த அஜய் மஸி (32), லாரியின் கிளீனரான உத்தரப் பிரதேச மாநிலம், ஆசம்கரைச் சேர்ந்த ஆதித்யா ராய் (19) மற்றும் அவர்களது கூட்டாளியான பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு லாரி ஓட்டுநர் கோவிந்த் பஸ்வான் (42) என்பது தெரிந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் 3 பேரும் சம்பந்தப்பட்ட மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிச் சென்று மதுரவாயல் பைபாஸ் மேம்பாலம் அருகே இறக்கி வைத்துவிட்டு லாரியை கோடம்பாக்கம் பகுதியில் விட்டுச் சென்றது தெரியவந்தது.
சிறையிலடைப்பு: இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.