

மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலையில் அரைகுறை ஆடையுடன் ஒருவர் கையில் கத்தி, கற்களுடன் சுற்றித்திரிந்தார். அவர் திடீரென சாலையோரத்தில் நிறுத்தி இருந்த கார்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தார்.
வெளிநாட்டுக்காரர் தோற்றத்தில் இருந்த அவரது செயலைத் தடுக்க அப்பகுதியினர் முற்பட்டனர். ஆனால், தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த அண்ணா நகர் போலீஸார் அங்கு சென்று, அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது, அரைகுறை ஆடையுடன் சுற்றிய அந்நபர் போலீஸாரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டினார். ஒரு வழியாக அவரை சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார், அவரிடம் இருந்த கத்தியை பறி்த்தனர்.
பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டபோது, அவரது பாஸ்போர்ட் சிக்கியது.
அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் (51) என்பதும், சுற்றுலா விசாவில் மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மது போதையில் அவ்வாறு செய்தாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து அண்ணா நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.