

இடது: கைதான தர்மமுனீஸ்வரன் | வலது: தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி
மதுரை: விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறியது: “தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த 12-ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் தொடக்கத்தில் எந்தத் தடயமும் இல்லாத நிலையில், திட்டமிட்ட, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் கொலையில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி காணாமல் போனது தொடர்பாக மார்ச் 11-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் மாணவியின் உடல் வேநத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. சம்பவ இடம் உடனடியாக பாதுகாக்கப்பட்டு விரல் ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் தடவியல் குழுவினரின் சோதனை நடத்தப்பட்டது. மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றது.
கூடுதல் டிஜிபி தலைமையில் உயர் காவல் துறை அதிகாரிகள் 3 நாள் முகாமிட்டனர். 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 150 போலீஸார் அடங்கிய 10 தனிப்படை அமைக்கப்பட்டது. உள்ளூர் சந்தேக நபர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வழக்குகளில் தொடர்புடையவர்கள், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் தொடர்புகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத போதிலும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 98 சிசிடிவி கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டது. 2,524 செல்போன் எண்களின் 2,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை அடிப்படையில் 50 பேர் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில், சம்பவ இடம் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு, பின்னால் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள காற்றாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது பார்த்தீபனூரில் திருடப்பட்டதும் தெரியவந்தது.
இதை வைத்து ஆய்வு செய்த போது சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது தர்மமுனீஸ்வரன் என்ற மாவீரன் அடையாளம் காணப்பட்டார். இவர் ஏற்கெனவே கடுமையான குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்றம் அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைத்து, தினமும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் கடந்த டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். தகவல் சேகரிப்பு, நுணுக்கமான விசாரணை, ஒருங்கிணைப்பு, அறிவியல், தொழில்நுட்பப் பகுப்பாய்வால் தடயம் இல்லாத வழக்குகளையும் தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.