

திருச்சி: சிறுமியை காரில் அழைத்துச் சென்று மது கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய வரம்புக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்புவரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த சிறுமி, மூன்றாம் பாலினத்தவராக உள்ள தனது சகோதரரை பார்க்க அதே பகுதியில் உள்ள மற்றொரு மூன்றாம் பாலினத்தவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரிச்செல்வம் (45) என்பவர், வீட்டிலிருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில், சிறுமிக்கு மதுகொடுத்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
பின்னர், சிறுமியை தாராநல்லூர் கீரைகடை பஜார் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். காரில் இருந்து இறங்கிய சிறுமி சாலையில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிதுநேரத்தில் காரில் மீண்டும் அங்கு வந்த மாரிச்செல்வத்தை பொதுமக்கள் பிடித்து, அவரை தாக்கியதுடன், காந்தி மார்க்கெட் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் இரவு திரண்ட சிறுமியின் உறவினர்கள், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலை கைவிட்டனர்.
பொதுமக்கள் தாக்கியதில் மாரிச்செல்வத்தின் காலில் எலும்பு முறிவும், உடலில் காயங்களும் இருந்ததால், அவரை போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாரிச்செல்வம் மீது ஆள் கடத்தல், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் கண்டனம்
இச்சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை எனும் செய்தியை கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழகம் முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு, முதல்வர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களை திசைதிருப்பாமல், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.