

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவரை கொலை செய்த நண்பர்கள் இருவரை போலீஸார் தேடுகின்றனர்.
திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அஸ்வின் (15). இவர் அருகேயுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அஸ்வின் பள்ளி செல்லவில்லை.
அவர் தனது நண்பர்கள் இளந்தமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த், காரையூரைச் சேர்ந்த கணேசன் மற்றும் டிப்ளமோ பயிலும் 17 வயது சிறுவனுடன் கீழக்காவனிபட்டி கண்மாய்க்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது தூரம் சென்ற நிலையில், 4 பேரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர். இதில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. கீழே விழுந்தது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அரவிந்த் கூறியுள்ளார். ஆனால், தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் கூறுவேன் என்று அஸ்வின் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், அஸ்வினை தாக்கியுள்ளார். இதனால் அச்சமடைந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர், அஸ்வின் திரும்பி வராததால் அந்த சிறுவன் மீண்டும் கண்மாய்க்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அஸ்வின் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். மற்ற இருவரையும் காணவில்லை. இதையடுத்து நள்ளிரவில் திருப்பத்தூர் காவல் நிலையத்துக்குச் சென்று அந்த சிறுவன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று அதிகாலை அங்கு சென்ற போலீஸார் அஸ்வினின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கீழச்சிவல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.