

சென்னை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் முத்துச்சாமி என்பவர் கடந்த 2004-09 காலகட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.62 கோடி கடன் பெற்றதாக வங்கியின் மண்டல துணை மேலாளர் கடந்த 2010-ல் சிபிஐயிடம் புகார் கொடுத்தார்.
புகார் விவரம் உண்மை என்றும், போலி ஆவணங்களை தயாரிக்க முன்னாள் விஏஓக்கள் தசரதன், மாணிக்கவேலு, வருவாய் அலுவலர் சிவக்குமார் உடந்தையாக இருந்ததும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
வங்கியின் தி.நகர் உஸ்மான் சாலை கிளை உதவி பொது மேலாளர் வெங்கடாச்சலம் ஆவணங்களை சரிபார்க்காததும் தெரியவந்தது. இதையடுத்து, முத்துச்சாமி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை 11-வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது முத்துச்சாமி, அவரது மனைவி ஜோதி உட்பட 4 பேர் காலமாகினர். உமாபதி என்பவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
நீதிபதி ஏ.எஸ்.ரவி முன்பு மற்ற 7 பேர் மீதான விசாரணை நடந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகமது இப்ராஹிம் ஆஜராகி குற்றச்சாட்டுகளை நிரூபித்தார்.
இதையடுத்து, வங்கி அதிகாரி வெங்கடாச்சலம், ஓய்வு பெற்ற விஏஓக்கள் மாணிக்கவேலு, தசரதன், வருவாய் அலுவலர் சிவக்குமார், இளம்பெண் தாமரைப்பூ ஆகிய 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தாமரைப்பூவின் கணவர் தண்டபாணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், மொத்தமாக ரூ.2.70 கோடி அபராதம் விதித்தும், முத்துச்சாமி மகள் லாவண்யாவை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.