

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சட்ட விரோதமாக கருந்திரி உற்பத்தி செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் வட மாநில பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் கல் குவாரி அருகே உள்ள செட்டில் சட்டவிரோதமாக கல்குவாரிகளுக்கு வெடி வைக்க பயன்படுத்தும் கருந்திரி உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இங்கு அசாம் மாநில தொழிலாளர்கள் கருந்திரி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (புதன்கிழமை) செட்டில் வெல்டிங் வேலை நடைபெற்று உள்ளது. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன், அவரது மகன் அழகுநம்பி ஆகியோர் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை 4:30 மணியளவில் செட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கருந்திரி மற்றும் கரிமருந்தில் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராஜபாளையத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், அங்கு பணிபுரிந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சாவித்திரி கோஸ் (50) என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித், மீராஜ், வெல்டிங் பணியில் ஈடுபட்ட கோடீஸ்வரன், அழகு நம்பி ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.