

சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு (வயது 19) முகநூல் மூலம் சென்னை மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த இளவரசன் (29) என்பவரது நட்பு கிடைத்துள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்த மாணவி, கடந்த 7-ம் தேதி விருகம்பாக்கம் சென்று, முகநூல் நண்பர் இளவரசனை சந்தித்துள்ளார்.
பின்னர், மாணவியை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று, நாகப்பட்டினத்துக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார் இளவரசன். நாகப்பட்டினம் திரும்பிய மாணவி, தனது பேக்கில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை காணாமல் திடுக்கிட்டார்.
இளவரசனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவிக்கு தெரியாமல்நகையை இளவரசன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.