

டிக்கெட் இல்லாதது தொடர்பாக, மோதலில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர், பெண் டிக்கெட் பரிசோதகர்.
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாதது தொடர்பாக பெண் வழக்கறிஞர், டிக்கெட் பரிசோதகர் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக, இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மாங்காட்டைச் சேர்ந்த மோகனா உயர்நீதிமன்ற வழக்கறிஞர். இவர் நேற்றுமுன்தினம், கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணித்ததாகவும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இவரிடம் ரயில்வே பெண் டிக்கெட் பரிசோதகர் ஷல்மா பேகம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு உறவினரை வழியனுப்ப வந்ததாக மோகனா தெரிவித்ததுள்ளார். இதையடுத்து, நடைமேடை டிக்கெட் காண்பிக்கும்படி ஷல்மா பேகம் கேட்க, மோகனாவிடம் டிக்கெட் இல்லாததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்களின் அறைக்கு வழக்கறிஞர் மோகனாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் மோகனா அறைந்தார். பதிலுக்கு டிக்கெட் பரிசோதகரும் மோகனாவை தாக்கினார்.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வழக்கறிஞரும், பெண் டிக்கெட் பரிசோதகரும் மோதிக்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.