

கோவை: கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி மகன் அமுதன் (19). ஒத்தக்கால் மண்டபத்தில் அறை எடுத்து தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இதே கல்லூரியில் படிக்கும் மாணவர் இளவரசன் (18) அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை இளவரசன் தங்கியிருந்த அறைக்குள் முகமூடி அணிந்த கும்பல் நுழைந்து, மாணவர்களைத் தாக்கி, இரு கைபேசிகளைப் பறித்துக் கொண்டு தப்பியது.
இளவரசன் உள்ளிட்டோர் அவர்களைத் துரத்தியபோது, ஒருவரது முகமூடி விலகியதில், அவர் அமுதன் எனத் தெரிந்தது.
இது குறித்து இளவரசன் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை அமுதன், அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகியோர் மலுமிச்சம்பட்டி அருகே சென்றபோது, செல்போன் பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர், காரில் வந்து அமுதனையும், ஸ்ரீமனையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அமுதன் தனது அறைக்கு திரும்பிய நிலையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, கல்லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.