கும்பகோணம்: பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களின் தாக்குதலில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து பிளஸ் 1 மாணவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பட்டீஸ்வரம் தேரோடும் கீழவீதியில் வெள்ளிக்கிழமை இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பிளஸ் 1 மாணவர்கள் 14-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, பிளஸ் 2 மாணவர் ஒருவரின் தலையில் ரீப்பர் கட்டையால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதையறிந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, மாணவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிளஸ் 1 மாணவர்கள் 14 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.