

தரணிஷ் | ஹரிஹரன்
திருப்பூர்: அவிநாசி அருகே அனந்தகிரியில் குட்டையில் மூழ்கி இரு சிறுவர்கள் இன்று (மார்ச் 1)காலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி மகன் தரணிஷ் (11). கருவலூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் மகன் ஹரிஹரன் (8). அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சனிக் கிழமை பள்ளி விடுமுறை என்பதால் விளையாடச் சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் அவிநாசி காவல் நிலையத்தில், சிறுவர்களை காணவில்லை என புகார் அளித்தனர்.
இந்த நிலையில் அவிநாசி அருகே நம்பியம்பாளையம் அனந்த கிரி குட்டையில், இரு சிறுவர்களின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தது தரணிஷ், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.