

Rs.40 Lakh
சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாநகர பேருந்தில் வந்த ரியல் எஸ்டேட் ஊழியரை, போலீஸார் என கூறி காரில் கடத்திச் சென்று கத்தி காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் பறித்தது தொடர்பாக போலீஸார், 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
திருச்சி, முதலியார் சத்திரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (55), இவர் அதே பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உரிமையாளர் கூறியபடி சென்னை மண்ணடியில் பில்டிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வரும் அவரது நண்பரிடம் இருந்து, ரூ.40 லட்சம் பணத்தை வாங்குவதற்காக சரவணகுமார், திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளார்.
பின்னர் சென்னை மவுண்ட் ரோடு எல்.ஐ.சி. அருகே உரிமையாளரின் நண்பரை சந்தித்து அவர் கொடுத்த ரூ.40 லட்சம் பணத்தை ஒரு பையில் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மாநகர பஸ்சில் ஏறி கிளாம்பாக்கம் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார்.
வண்டலூர் அருகே வரும்போது பேருந்தில் சரவணகுமாரின் இருக்கை அருகே அமர்ந்திருந்த 2 பேர் திடீரென சரவணகுமார் கையில் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்த மாநகர பேருந்து நடத்துநர், “நீங்கள் யார் ஏன் அவரிடம் இருந்து பையை பறிக்கின்றனர் என்று கேட்டதற்கு, பையை பறித்த 2 பேரும் நாங்கள் போலீஸ். இந்த நபர் வைத்திருக்கும் பையில் கஞ்சா உள்ளது. உடனடியாக பேருந்தை நிறுத்துங்கள். நாங்கள் இவரை அழைத்து செல்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி நடத்துநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி 3 பேரையும் கீழே இறக்கி விட்டார். கீழே இறங்கியவுடன் பின்னால் வந்த ஒரு காரில் சரவணகுமாரை ஏற்றினர். ஏற்கெனவே காரில் 2 பேர் இருந்தனர். காரில் செல்லும் போது 4 பேரும் சேர்ந்து கத்தியைக் காட்டி, மிரட்டி அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை பறித்துக் கொண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி அருகே அவரை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். நடந்த சம்பவங்கள் பற்றி சரவணகுமார் கிளாம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார்.
இது சம்பந்தமாக கிளாம்பாக்கம் போலீஸார் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மறைமலை நகர் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.