

சென்னை, கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் செயல்படும் பப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மது விருந்தின் போது பக்திப் பாடலான முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த மதுப் பிரியர்கள், அந்தப் பாடலுக்கு போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பாரத் இந்து முன்னணியினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த் மனுவில், "முருகப் பெருமானின் கவசமாகப் போற்றப்படும் புனிதமான மந்திரத்தை, மதுபான விடுதியில் ஒலிக்கச் செய்தது கடும் கண்டனத்துக்கு உரியது. மது அருந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் இந்தப் பாடலுக்கு கேலியாக நடனமாடியது முருகப் பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடலுக்கு மதுப் பிரியர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.