

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில், பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (38), தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த 2025-ம் ஆண்டு கோபிநாத் என்ற எலக்ட்ரீஷியனுடன் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர் தானும் தனது சகோதரர் சரவணனும் அரசு வேலைக்காக முயன்று வருவதாக கோபிநாத்திடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கோபிநாத் தனது நண்பர் கிஷோர் என்பவரை அறிமுகப்படுத்தினார்.
கிஷோர் அவர்களை அமர்பிரசாத் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அமர்பிரசாத் தனது தம்பி சசிகுமார் அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும், அவருக்குப் பெரிய மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் எளிதாக வேலை வாங்கித் தர முடியும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
இவர்களின் பேச்சை உண்மை என்று நம்பிய தினேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே வைத்து சசிகுமாரிடம் ரூ.18 லட்சத்தை நேரில் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தரவில்லை.
பணத்தைத் திரும்பக் கேட்டபோதும் முறையாக பதிலளிக்காமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ்குமார், இதுகுறித்து கடந்த 12-ம் தேதி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக ஊழியர் சசிகுமார் உட்பட கூட்டாளிகள் 5 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.