

சென்னை: நடிகை கவுதமி நில மோசடி வழக்கில் தொழிலதிபர் அழகப்பன் கைது செய்யப்பட்டார். கடந்த 2023-ம் ஆண்டு நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன், பெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை ரூ.6 கோடி கொடுத்து ஏமாற்றி தன்வசப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி அழகப்பனை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்த நில மோசடியில் பெரும் அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் பரிந்துரையின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுத்தனர். கடந்த ஜூன் மாதம் அழகப்பனுக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அழகப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அழகப்பன் ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் நடத்திய நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.