

வருமானவரித் துறையில் கடவுச் சொல்லை திருடி முறை கேடாக டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற்ற விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரியான அவரது சகோதரர் ஆகியோ ருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகவும், இவரது தம்பியான பிரசாத்குமார் வருமான வரித்துறையில் மூத்த உதவி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது தாயார் மணிமேகலையுடன் சேர்ந்து கடந்த 2015 முதல் 2019 வரை தாக்கல் செய்த வருமானவரி கணக்குக்கான டிடிஎஸ் தொகையாக ரூ.22.14 லட்சத்தை வருமானவரித் துறையின் கடவுச் சொல்லை திருடியும், போலியாக கணக்கு காண்பித்தும் திரும்பப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக, வருமானவரித் துறை உதவி ஆணையர் கடந்த 2019 டிசம்பரில் சிபிஐக்கு புகார் அளித்தார்.
அதன் பேரில், சிபிஐ போலீஸார் இவர்கள் மூவர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட் டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ் முன் பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் பிரசாத் குமார் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவர்களது தாயார் மணிமேகலை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்பதால், அவரை விடுதலை செய்தார்.
காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.