

சென்னை: மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை, கொடுங்கையூர், அன்னை சத்யா நகரில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆர்.கே.நகர் எம்எல்ஏ ஜே.ஜே. எபினேசர் கடந்த 29-ம் தேதி திறந்து வைத்தார்.
மறுநாள் அங்கு சென்ற அதிமுக வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் சிலர் பூட்டி வைக்கப்பட்டிருந்த சாலையோர பூங்காவில் நுழைந்து மின் விளக்குகள், புல்வெளிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், தரமற்ற முறையில் பூங்கா கட்டப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் 4-வது மண்டல உதவிப் பொறியாளர் சத்யன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் ஆர்.எஸ்.ராஜேஷ் உட்பட மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, உதவிப் பொறியாளர் சத்யன் தூண்டுதலின் பேரில் தமிழரசன் என்பவர் வீடு தேடி வந்து மிரட்டிவிட்டுச் சென்றதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஆர்.எஸ்.ராஜேஷ் புகார் அளித்துள்ளார். அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.