

கைதான ஓட்டுநர் சரவணன்
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, கார் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளர் தம்பதியின் 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, நீண்ட நேரத்துக்கு பிறகு அழுதபடியே வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவர், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் கார் ஓட்டுநரான சரவணன் என்பவர், தன்னை காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவம் இடம் விரைந்த பூந்தமல்லி போலீஸார், விசாரணை நடத்தி தனியார் கார் ஓட்டுநரான சரவணனை பிடித்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும், விசாரணையின் அடிப்படையில், ஓட்டுநர் சரவணனை கைது செய்த போலீஸார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.