

புழல் பகுதியில் முகமூடி கொள்ளை நடைபெற்ற வீடு.
சென்னை: புழல், மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஜவுளி அதிபரான இவர், மணிப்பூர் மாநிலத்தில் கம்பளிப் போர்வை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் விஜயகுமார் வீட்டின் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். முகமூடி அணிந்து வந்த அந்த கும்பல், வீட்டு கதவின் முன்பு தயாராக இருந்துள்ளனர்.
விஜயகுமாரின் மனைவி வசந்தா காலையில் வீட்டின் கதவைத் திறந்தபோது, தயாராக நின்றிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் வசந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து, மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் அவரது கைகளைக் கயிற்றால் கட்டி, சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்டிக் டேப்பை ஒட்டினர். சத்தம் கேட்டு எழுந்து வந்த விஜயகுமாரை, இருவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
தொடர்ந்து அவரது கைகளையும் அதே பாணியில் கட்டி வாயில்டேப் ஒட்டினர். அப்போது, மேல்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரின் வயதான தாயார் லட்சுமி மற்றும் மகள்கள் சினேகா, பவித்ரா ஆகியோரும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.
அவர்களையும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கத்திமுனையில் கட்டுப்போட்டனர். பின்னர் அனைவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டினர். பின்னர், விஜயகுமாரை மட்டும் தனியாக அழைத்து படுக்கையறையில் இருந்த பீரோவை திறக்க வைத்து அதிலிருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து விஜயகுமாரின் தாய், மனைவி, மகள்கள் என அனைவரும் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகை என 30 பவுன் தங்க, வைர நகைகளை கொள்ளை அடித்து, சாக்குப்பை ஒன்றில் மூட்டை கட்டி தாங்கள் கொண்டு வந்த காரில் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், வழக்கம் போல பணிக்கு வந்த வேலையாட்கள், விஜயகுமார் உட்பட அனைவரையும் மீட்டனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து புழல் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகளை சேகரித்து சென்றனர். முதல் கட்டமாக 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.