

சென்னை: போதைப் பொருளாக வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்த பிஹார் மருந்து கடை உரிமையாளரை, சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் போலீஸார், கடந்த மாதம் 19-ம் தேதி இரவு, கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன் குமார் (23), அரவிந்த் (27), ரஞ்சித் (28) உள்பட 8 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அந்த 8 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் பிஹார் மாநிலத்தில் உள்ள மருந்துக் கடையில் இருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிஹார் விரைந்த சென்னை தனிப்படை போலீஸார் அங்குள்ள அராரியா மாவட்டம், அராரியா டவுன் பகுதி சென்று அங்கு மருந்துக் கடை நடத்தி வந்த பெரோஸ் ரியா (46) என்பவரை கைது செய்தனர்.
இவர்தான் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக சென்னைக்கு கடத்த கொடுத்துள்ளார். இதையடுத்து, அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இவரது மகன் பகாத் ரிஷா (20), ஏற்கனவே சட்டவிரோத மாத்திரை விற்பனைக்காக, பிஹார் மாநில போலீஸார் அண்மையில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.