

ராஜலட்சுமி
சென்னை: ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பாலியல் தடுப்புப் பிரிவில்(1) ஆய்வாளராக பணிபுரிகிறார். இவர் திருமங்கலம், வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர் பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிகளவில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
முடிவில் பல்வேறு சொத்துகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்து கையோடு எடுத்துச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக வருமானத்தை விட 372% அதிக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதில், “குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆய்வாளர் ராஜலட்சுமி மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பாலியல் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போன்ற முக்கியமான இடங்களில் பணிபுரிந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான காலகட்டத்தில், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருந்துள்ளார்.
1999-ல் நேரடி எஸ்ஐ-யாக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பிறகு, 2010 முதல் சென்னை நகருக்குள் மட்டுமே முக்கியமான இடங்களில் பணிபுரிந்துள்ளார். எனவே அவரது சட்டவிரோத வருவாயைக் கணக்கிட 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான காலம் கணக்கிடப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் அவர் வருமானத்தை விட ஊழல் மற்றும் சட்டவிரோத வழிகளில் ரூ.5.42 கோடிக்கு சொத்துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் வாங்கியுள்ளார்.
அதாவது வருமானத்தை விட 372% அதிகளவில் சொத்து சேர்த்துள்ளார். இதையடுத்து, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.