

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதுபோல் 5 மற்றும் 6-வது அணு உலைளுக்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வந்திருந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் நேற்று மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோல் மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடங்குளம் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.