

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
தாயுமானவர் திட்டம், கல்வி சுய தொழில் மற்றும் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் இந்நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3543 பயனாளிக்கு ரூ.8.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டபோது, அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவ்வாறு பணி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2011-2021 காலகட்டத்தில் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களைத் தேர்வு செய்து, மாறுதல் மூலம் இங்கு பணியமர்த்தும் போக்கு உள்ளது. இது கண்டனத்திற்கு உரியது. இதைத் தடுத்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வர் போராடி வருகிறார்.
மேலும், அங்கு அணுக்கழிவுகளைக் கையாள்வதற்கான முறையான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அணுக் கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனப் பகுதிகளுக்குக் கழிவுகளை கொண்டு செல்லாமல், இங்கேயே தேக்கி வைப்பது அப்பகுதி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அணு உலையால் மீனவ கிராமங்களான பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மீனவர்கள் தூண்டில் வளைவு கேட்கின்றனர். இதற்காக தமிழக அரசு நிதி கொடுத்தாலும், மத்திய அரசும், அணு உலை நிர்வாகமும் ஒரு பைசா கூட கொடுப்பதில்லை.
ரஷ்ய அதிபரும், பிரதமரும் ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். ரூ.6.5 லட்சம் கோடிக்கு வர்ததகம் நடைபெறுகிறது என்றால் நமது ஏற்றுமதி வெறும் ரூ. 45 ஆயிரம் கோடிதான். அங்கிருந்து இறக்குமதிதான் அதிகம் செய்கிறோம். நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறங்குமதி செய்கின்றனர். இதனால் இந்திய மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த 4 நிறுவனங்களுக்காக பிரதமர் ரஷ்ய அதிபர் அழைத்து வந்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
மொத்தத்தில் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய இழப்புத்தான். இதில் எந்த லாபமும் இல்லை. லாபம் வேண்டும் என்றால் நமது பிரதமர், மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். பிரதமர் - ரஷ்ய அதிபர் சந்திப்பால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் நன்மையில்லை
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியே இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து அதன் பின்பு நீக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் பாதிப்பு இருக்காது.
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக மதக்கலவரத்தைத் தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, மேயர் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.